சென்னை: வள்ளுவர் கோட்டம் அருகே திமுக அரசை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஜி.கே.வாசன், "தமாகா சார்பில் நடைபெறும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் கோட்டையில் உள்ளவர்கள் காதில் விழுந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தமாகா வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியோடு பணியாற்ற வேண்டும்.
ஆர்ப்பாட்டம் தொடரும்
சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று தான் மக்கள் நம்பி வாக்குகளை அளித்தார்கள். ஆனால் அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை.
திமுக அரசு தப்பித்து வருகிறது
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அதிமுக, பாஜகவை குறை கூறியே திமுக அரசு தப்பித்து வருகிறது. அதனை மக்கள் ஏற்கமாட்டார்கள்.
தேர்தலுக்கு முன்பு, பதவிக்கு வந்த உடன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று கூறிவிட்டு தற்போது 5 ஆண்டுகள் ஆகும் என்று கூறுவது ஏற்க முடியாது.
வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன தயக்கம்
நகரம் முதல் கிராமம் வரை திமுக அளித்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் காத்துகொண்டு இருக்கின்றனர். வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன தயக்கம். நிதி இல்லை என்று கூறும் அரசுக்கு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நிதி பற்றாக்குறை பற்றி தெரியாதா?.
மக்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றம்
ஆட்சி மாற்ற முடிவு மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. மேகதாது அணை கட்ட ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.
விவசாயிகளுக்கு உறுதுணையாக தமாகா இருக்கும்
டெல்டா பகுதிகளில் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி தமாகா விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் தான். அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை" என்றார்.
இதனைத்தொடர்ந்து சமையல் கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாகவும், இதனால் இல்லத்தரசிகள் அதிருப்தியில் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தமாகாவின் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.
இதையும் படிங்க: கிடுகிடுவென உயரும் சிலிண்டர் விலை - மக்கள் அதிருப்தி